search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது- நானும் அதை சாப்பிடுகிறேன்: மேகாலயா பாஜக தலைவர்
    X

    மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது- நானும் அதை சாப்பிடுகிறேன்: மேகாலயா பாஜக தலைவர்

    • பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது.
    • இந்தியாவில் பாஜக ஆட்சி செய்து வரும் 9 ஆண்டுகளில் எந்த கிறிஸ்தவ ஆலயங்களும் இடிக்கப்படவில்லை. இவை வெற்று அரசியல் பிரசாரம்தான்.

    மேகாலயாவில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜக கட்சியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை. மேகாலயாவில் அனைத்து தரப்பு மக்களும் மாட்டிறைச்சி சாப்பிட்டு வருகிறார்கள். நானும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். எங்களின் சொந்த உணவு பழக்க வழக்கங்களையே நாங்கள் கடை பிடித்து வருகிறோம். அதை பின்பற்றுவதற்கு எந்த தடையும் கிடையாது. பாஜக ஜாதி, மதம் பார்க்காது.

    யாராலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடுக்க முடியாது. எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்ற எந்தவிதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இல்லை. ஜாதி, மதம், பழக்க வழக்கங்கள் சார்ந்து பாஜக எந்த காரணத்தை கொண்டும் யோசிக்காது.

    பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது. நாங்கள் இருப்பது மேகாலயா. இங்குள்ள கலாச்சார முறையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இங்கு பெரிய கறிக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில் மாட்டுக்கறி, பன்றி இறைச்சி ஆகியவை வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதரான கட்சி என்று சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி இல்லை. இந்தியாவில் பாஜக ஆட்சி செய்து வரும் 9 ஆண்டுகளில் எந்த கிறிஸ்தவ ஆலயங்களும் இடிக்கப்படவில்லை. இவை வெற்று அரசியல் பிரசாரம்தான்.

    மேகாலயா கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசிக்கும் மாநிலம். இங்குள்ள தேவாலயங்களுக்கு அனைத்து தரப்பினருமே வருகிறார்கள். கோவா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த மாநிலங்களிலும் ஒரு தேவாலயம் கூட தாக்கப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தை பரப்பி வருகின்றன. ஆனால் அவை எல்லாமே பொய் பிரசாரம் தான்.

    நானும் ஒரு கிறிஸ்தவன்தான். நான் தேவாலயத்துக்கு செல்லக்கூடாது என்று யாருமே என்னிடம் கூறியது கிடையாது. மேகாலயாவில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×