search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலை- முக்கிய குற்றவாளி மராட்டியத்தில் சிக்கினார்
    X

    கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலை- முக்கிய குற்றவாளி மராட்டியத்தில் சிக்கினார்

    • கோழிக்கோட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட ரெயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

    இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர்.

    அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்திற்கும் மாவோயிஸ்டு பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கேரள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் இதுபற்றி மத்திய உளவு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய உளவு துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு பிரிவினரும் கோழிக்கோடு சென்று விசாரணை நடத்தினர்.

    குறிப்பாக கோழிக்கோட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட ரெயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர். மேலும் அந்த பகுதி முழுவதும் சோதனையும் மேற்கொண்டனர். இதில் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய விவகாரம் தொடர்பாக பல முக்கிய ஆதாரங்களை திரட்டினர்.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறும்போது, இந்தியாவின் போபாலில் இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பை நடத்தினர். இதுதான் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய முதல் நாசவேலை ஆகும்.

    அப்போது அவர்கள் போபாலில் இருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு வந்துள்ளனர். அதுபோல இப்போதும் கேரள ரெயிலில் பெட்ரோல் ஊற்றி பயணிகளை எரித்த நபருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். மேலும் மகாராஷ்டிராவில் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிரடிப்படையினரும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இன்று அதிகாலை கேரள போலீசார் தேடிய ஷாருக் செய்பி பிடிப்பட்டார். அவரை கைது செய்த அதிரடி படையினர் இந்த தகவலை மகாராஷ்டிரா அதிரடி படையினர் கேரள போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்திய பின்னர் தான் மகாராஷ்டிராவில் கைதானவர், கேரள ரெயிலில் பெட்ரோல் ஊற்றி 3 பயணிகளை கொலை செய்த நபரா? என்பது தெரியவரும்.

    கேரள ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்றதாக உத்தரபிரதேசத்தில் கைதான நபர் விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் இன்னொருவர் கைதாகி இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இந்த சம்பவத்தில் பயங்கரவாத கும்பலின் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் பிடிபட்டுள்ளார்.

    இந்த தகவலை மகாராஷ்டிரா போலீசார் எங்களுக்கு தெரிவித்தனர். அவரிடம் சம்பவம் குறித்து கேரள போலீசார் விசாரிக்க உள்ளனர். இதற்காக கேரளாவில் இருந்து இன்று போலீஸ் அதிகாரிகள் குழு ரத்தினகிரி செல்கிறது.

    இக்குழுவினர் மகாராஷ்டிராவில் பிடிபட்ட நபரை காவலில் எடுத்து இங்கு அழைத்து வருவார்கள். கேரளா வந்ததும் அந்த நபரிடம் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×