search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடும் அமளி எதிரொலி- 3வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்
    X

    கடும் அமளி எதிரொலி- 3வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்

    • ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய ஜனநாயகம் சீர் குலைந்து வருவதாகவும், அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று லண்டனுக்கு சமீபத்தில் சென்ற ராகுல்காந்தி பேசி இருந்தார்.

    பாராளுமன்ற 2-வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இந்த விவகாரத்தை பா.ஜ.கவினர் கிளப்பினார்கள். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது.

    ராகுல்காந்தி, அதானி பிரச்சினையால் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டன. ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் இன்று 3-வது நாளாக முடங்கியது.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். கூட்டுக்குழு விசாரணை கோரி அவர்கள் கைகளில் பதாகைகளை வைத்து இருந்தனர்.

    சபையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதிலடியாக கோஷமிட்டனர். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

    எதிர்க்கட்சி, ஆளும்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம்.பிர்லா வால் அவையை நடத்த முடியவில்லை. யாரும் அமைதி அடையாததால் அவர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

    மேல்சபையிலும் இதே விவகாரத்தால் அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் அவையில் கூச்சல்- குழப்பம் நிலவியது.

    இதைதொடர்ந்து அவைத் தலைவர் 2 மணி வரை சபையை ஒத்திவைத்தார். ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2 மணி வரை முடங்கின.

    Next Story
    ×