search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தீபாவளிக்கு 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி... சரவெடி பட்டாசுக்கு தடை நீடிப்பு: சுப்ரீம் கோர்ட்
    X

    தீபாவளிக்கு 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி... சரவெடி பட்டாசுக்கு தடை நீடிப்பு: சுப்ரீம் கோர்ட்

    • தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
    • பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, பாதுகாத்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜூன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விளக்கங்களை கேட்ட பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.

    இதன்படி பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேரியம் இல்லாத பட்டாசுகளை தயாரிப்பது சிரமமாகும். அது சரவெடியில் குறைவான அளவே உள்ளது. எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு சரவெடி பட்டாசு விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியது. சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    சரவெடியில் பேரியம் வேதிப்பொருள் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது. அது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற பட்டாசு நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    பேரியம், சரவெடி ஆகிய இரண்டில் மட்டுமே தீர்ப்பு கூறியிருப்பதாகவும், மூல வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் தீபாவளிக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்தினர்.

    நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

    தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும். பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    வழக்கு விசாரணையின்போது பசுமை பட்டாசுகளில் எந்த மாதிரியான மூலப்பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு எப்போது பட்டியலிடப்படும் என்று மனுதாரர்களும் எதிர்மனுதாரர்களும் கேட்டனர்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் "ஹேப்பி தீபாவளி" என்று தெரிவித்தனர். காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×