தேர்தல் ஆணையர் நியமன மசோதா: மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றம்

தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.இதனை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தேர்தல் ஆணையர் நியமன மசோதா: மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம் (Executive), பாராளுமன்றம் (Legislature) மற்றும் நீதித்துறை (Judiciary) என மூன்றும் முக்கியமான அங்கங்கள். அவ்வப்போது இவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகள் உருவாவதுண்டு.

அத்தகைய ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்கக்கூடிய ஒரு சட்டத்திற்கான மசோதா கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் சம்பந்தமான ஒரு புதிய மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி மாநிலங்களைவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகிய 3 பேரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை இந்திய ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையர்களாகவும், மாநில தேர்தல் ஆணையர்களாகவும் நியமனம் செய்வார்.

இதற்கிடையே, மத்திய மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் கூறுகையில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை 3 பேர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com