என் மலர்
இந்தியா

ராகுல் காந்தி பேச்சு பொய்கள் நிறைந்தவை: அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோருவோம்- கிரண் ரிஜிஜு
- இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் பாரத மாதாவை விற்றுவிட்டது.
- விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டதன் மூலம் இது மொத்த சரணடைந்து விட்டது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசினார். அப்போது "இந்தியா- அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் பாரத மாதாவை விற்றுவிட்டது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டதன் மூலம் இது மொத்த சரணடைந்து விட்டது" எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தியாவை விற்றுவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி பேச்சு பொய்கள் நிறைந்தது. அதை நீக்கக்கோருவோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
ராகுல் காந்தி பேச்சில் என்னென்ன பொய்கள் உள்ளனவோ, அவற்றை நீக்கக் கோருவோம். ராகுல் காந்தி பேசியது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கருத்துகள் என உறுதி செய்கிறார். அவரால் அங்கீகரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், அவர் பொய் பேசினார். அவர் அவையில் பொய் கூறினார்.
அவர் வேண்டுமென்றே பொய் பேசினார். பின்னர் அமைச்சர் பதிலை கேட்காமல், உடனடியாக அவையில் இருந்து வெளியேறினார்.
அவைக்கு வெளியில் ராகுல் காந்தி பொய்க்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். ஆனால் அவைக்கு உள்ளே, இது தொடர்பாக நோட்டீஸ் வழங்குவோம். சபாநாயகரிடம் தேவையான நோட்டீஸ் வழங்குவோம். பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு பயனுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்யவில்லை. ஆனால் சில காட்டுமிராண்டித்தனமான குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறினார்.
இந்தியாவை யாராலும் வாங்கவும், விற்கவும் முடியாது. இதுகுறித்து யாரும் நினைக்க வேண்டும். 2011-12-ல் இந்தியா ஐந்து பலவீனமான நாடுகளில் ஒன்றாக இருந்தது. தற்போது நாம் 4-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளோம்.
இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.






