என் மலர்tooltip icon

    இந்தியா

    துணை ஜனாதிபதியாக தேர்வு: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர் வாழ்த்து
    X

    துணை ஜனாதிபதியாக தேர்வு: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர் வாழ்த்து

    • பொது வாழ்வில் உங்கள் பல தசாப்த கால அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்- ஜனாதிபதி
    • நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார்- பிரதமர்

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் "இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். பொது வாழ்வில் உங்கள் பல தசாப்த கால அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். வெற்றிகரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பதவிக் காலத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் "2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கை எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே "தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற மரபுகளின் உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவார் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு சமமான இடத்தை உறுதி செய்வார் என்றும் நாங்கள் நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

    உங்களுடைய பரந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டால், துணைத் தலைவர் பதவி நிச்சயமாக அதிக மரியாதையையும், பெருமையையும் பெறும் என முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×