என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை - பிரதமர் குற்றச்சாட்டு
- குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குஜராத்தின் பெருமை என பிரதமர் மோடி பேசினார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நவ்சாரியில் நடைபெற்ற 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் சுமார் ₹ 3,050 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 8 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி குஜராத்தின் பெருமை. ஏழைகளின் நலன் மற்றும் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில் எங்கள் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு அரசாங்கம் செயல்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறையை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சிகிச்சை வசதிகளை நவீனப்படுத்த முயற்சித்துள்ளோம், மேலும் சிறந்த ஊட்டச்சத்து, சுத்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.
மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி அணுக முடியாத இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்கின்றன என தெரிவித்தார்.






