என் மலர்
இந்தியா

இந்த நான்கு சாதிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் செல்பவர்களுக்கு அமோக ஆதரவு- பிரதமர் மோடி
- 4 மாநிலங்களில் மூன்றில் பா.ஜனதா ஆட்சி அமைக்க இருக்கிறது.
- காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பறித்துள்ளது பா.ஜனதா
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நேற்று 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பா.ஜனதாவுக்கு பலத்த அடி கொடுக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட நிலையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசிடம இருந்து ஆட்சியை பறித்தது.
தெலுங்கானாவில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மிசோரமில் 3 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலை விட ஐந்து மாநிலங்களிலும் அதிக இடங்களை பிடித்துள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகளால் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி கூறுகையில் ''மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு இருக்கும்போது, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை என்பது பொருத்தமற்றதாகிவிடும். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்கள் நலன், நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
குளிர்காலம் காலதாமதமாகிறது. ஆனால், அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய நான்கு 'சாதிகளுக்கு' அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் செல்பவர்களுக்கு அமோக ஆதரவு கிடைக்கிறது" என்றார்.






