search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது- மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
    X

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது- மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

    • இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர்.
    • அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    இன்று அவர் 99-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சி குறித்து நாட்டு மக்களிடையே மிகுந்த உற்சாகம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 100-வது நிகழ்ச்சி தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

    இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். சமீபத்தில் வந்தே பாரத் ரெயிலை ஆசியாவின் முதல் பெண் டிரைவர் சுரேகா யாதவ் இயக்கினார்.

    சியாச்சினில் முதல் பெண் அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் பணியமர்த்தப்பட்டார். நாகாலாந்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருதை பெண் இயக்குனர் வென்றுள்ளார்.

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். உறுப்புகளை பெற்றவர்கள், தானம் செய்தவர்களை கடவுளாக பார்க்கிறார்கள்.

    பஞ்சாப்பில் சுக்பீர்சிங்-சுக்பீத் கவுர் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 39 நாட்களில் உலகை விட்டு பிரிந்தார். அந்த மகளின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் கொண்டாடப்பட்டன. நாம் ஒருவரையொருவர் தெரிந்து, அறிந்து கொள்ளும் போது ஒற்றுமை உணர்வு வலுவடைகிறது.

    இந்த ஒற்றுமை உணர்வுடன் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற உள்ளது. சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதி வரை நடைபெறும்.

    குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவுக்கும், தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு? என்று சிலர் ஆச்சரியப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிராவை சேர்ந்த பலர் தமிழ்நாட்டின் பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்றும் சவுராஷ்டிரா தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    இந்நிகழ்ச்சி குறித்து தமிழகத்தை சேர்ந்த பலர் எனக்கு பாராட்டு கடிதங்கள் எழுதியுள்ளனர். மதுரையில் வசிக்கும் ஜெயச்சந்திரன் எழுதிள்ள கடிதத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சவுராஷ்டிரா-தமிழ் உறவுகளை பற்றி முதன் முறையாக ஒருவர் சிந்தித்து, சவுராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய மக்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார். இவரது இந்த வார்த்தைகள் ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர, சகோதரிகளின் வெளிப்பாடு.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சுகாதாரமான சூழலை மக்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×