

வீடுகளில் ஆண்கள் சமையல் செய்வதை கூட எளிதில் செய்து விடுவார்கள். ஆனால் சமையல் செய்த பாத்திரங்களை கழுவுவது தான் அவர்களுக்கு கஷ்டமாக கருதுகிறார்கள். இந்நிலையில் பாத்திரங்களை கழுவுவதை தவிர்ப்பதற்காக ஒருவரின் நூதன செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் ஹர்ஷ்கோயங்கா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு நபர் சமையல் செய்த பின் சாதத்தை பாத்திரங்களில் பரிமாற தயாராகும் காட்சியுடன் தொடங்குகிறது. பாத்திரங்கள் கழுவும் பிரச்சனையை உணர்ந்து அந்த நபர் உணவுகளை தட்டில் பரிமாறுவதற்கு முன்பே பாத்திரங்கள் மீது பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி அவற்றை மூடி அதன் மீது உணவுகளை பரிமாறி சாப்பிடும் காட்சிகள் உள்ளது. அவர் தட்டு மட்டுமல்லாது கரண்டி, டம்ளர் என பாத்திரங்கள் அனைத்தையும் பிளாஸ்டிக் கவரால் மூடி பயன்படுத்துகிறார். சாப்பிட்டு முடித்ததும் பிளாஸ்டிக் கவர்களை எந்த சிரமமின்றி அகற்றிவிட்டு பாத்திரங்களில் ஒரு கறை கூட இல்லாமல் அலமாரியில் அழகாக வைக்கும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ சமையல் அறையில் அன்றாடம் எதிர்கொள்ளும் போராட்டங்களை நினைவூட்டுவதாக சில பயனர்களும், தண்ணீர் இல்லாத பொழுது இவ்வாறு செய்யலாம் என சில பயனர்களும் கருத்துக்களை பதிவிட்டனர்.
ஆனால் சில பயனர்கள், இது போன்ற ஆரோக்கியமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.