என் மலர்
இந்தியா

மம்தா பானர்ஜி
குடியுரிமை சீர்திருத்த சட்டம் பெயரில் மத்திய அரசு மக்களை குழப்புகிறது - மம்தா பானர்ஜி
- தேர்தல் நெருங்கும்போது குடியுரிமை சீர்திருத்த சட்டம் பற்றி பா.ஜ.க. பேசுகின்றனர்.
- பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது என குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மத்துவா சமூக மக்களை நானும், திரிணாமுல் காங்கிரசும் அதிக கவனம் எடுத்துப் பாதுகாத்து வருகிறோம். அவர்கள் கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள். நீண்டகாலம், நாங்கள் அவர்களை கவனித்து வருகிறோம். ஆனால், தேர்தல் நெருங்கும்போது பா.ஜ.க. அவர்களிடம் சென்று நாங்கள் உங்கள் நண்பர்கள் எனக்கூறி குடியுரிமை சீர்திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) பற்றி பேசி குழப்பி விடுகின்றனர்.
இந்த சி.ஏ.ஏ. சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், இந்த சட்டத்தின் கீழ் விதிகளை அரசு இன்னும் வகுக்கவில்லை. அதனால் இதுவரை யாருக்கும் இச்சட்டத்தின்படி குடிமக்கள் அந்தஸ்து வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது. மத்திய அரசு எங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை பாக்கி தொகையை இன்னும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.






