என் மலர்
இந்தியா

காந்தி நினைவிடத்தின் பார்வையாளர் பதிவேட்டில் அதிபர் புதின் எழுதியது இதுதான்
- டெல்லி விமான நிலையம் வந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
- பிரதமர் மோடி அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார்.
புதுடெல்லி:
ரஷிய அதிபர் புதின் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார்.
டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன்பின், இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். அதைத் தொடர்ந்து, புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின், அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் அதிபர் புதின் எழுதியதாவது:
மகாத்மா காந்தி அகிம்சை மற்றும் உண்மை மூலம் நமது பூமியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு விலைமதிப்பில்லாத பங்களிப்பை செய்துள்ளார். அவரது செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது.
மகாத்மா காந்தி ஒரு புதிய, நியாயமான, பன்முக உலக ஒழுங்கை நோக்கிய பாதையைக் காட்டினார். அந்த உலகம் இப்போது உருவாகி வருகிறது. சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகளை இந்தியா இன்று உலக மக்களுடன் சேர்ந்து - சர்வதேச அரங்கில் அவரது கொள்கைகளையும், மதிப்புகளையும் பாதுகாக்கிறது. ரஷ்யாவும் அவ்வாறே செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் புதின் ரஷிய மொழியில் இந்தக் குறிப்பை எழுதியது குறிப்பிடத்தக்கது.






