வாட்ஸ்அப்பில் இரங்கல் தெரிவித்து மனைவியை கொலை செய்த வாலிபர்- 12 தடவை மார்பில் கத்தியால் குத்திய கொடூரம்

ஆரம்பத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாட்ஸ்அப்பில் இரங்கல் தெரிவித்து மனைவியை கொலை செய்த வாலிபர்- 12 தடவை மார்பில் கத்தியால் குத்திய கொடூரம்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட் (வயது 35) இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தை சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது.

ஆரம்பத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு முற்றியதால் இனிமேலும் உன்னுடன் வாழ முடியாது என கணவரிடம் கூறி விட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரத்தோட் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் மனைவி புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் செய்தியை பதிவிட்டார். இது அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் மனைவியை தேடி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. என் புகைப்படத்தை வெளியிட்டு எப்படி இரங்கல் தெரிவிக்கலாம் என கூறி வித்யா கணவரிடம் சண்டை போட்டார்.

தகராறு முற்றவே விஜய் ரத்தோட் கத்தியால் மனைவி வித்யாவை சரமாரியாக குத்தினார். 12 தடவை அவர் குத்தியதில் வித்யாவின் கழுத்து, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வித்யா அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விஜய் ரத்தோட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமியார் மற்றும் விஜய் ரத்தோட்டின் தம்பி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com