பாரத் யூரியா பையில் 'மேட் இன் சைனா' வாசகம்: விவசாயிகள் அதிர்ச்சி

பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தரமான உரம் கிடைக்கும் என்றார்.
பாரத் யூரியா பையில் 'மேட் இன் சைனா' வாசகம்: விவசாயிகள் அதிர்ச்சி
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் உள்ள உர நிறுவனங்கள், இனி 'பாரத்' என்ற பொதுப்பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும். உர மானியத் திட்டத்தைக் குறிக்கும் முத்திரை, பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் யூரியாவின் விலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின் உற்பத்திச்செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது.

உணவு மானியத்திற்கு அடுத்தபடியாக, உரத்திற்குதான் இந்திய அரசு அதிகளவில் பணம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதாவது சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் அந்த மானியம் ஒதுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் இனி விவசாயிகளுக்கு மலிவு விலையில் "பாரத் பிராண்டின்" தரமான உரம் கிடைக்கப் போகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் விற்கப்படும் பாரத் யூரியா பையில் மேட் இன் சைனா என்ற வாசகம் இந்தியில் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திரிணாமுல் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

கனடாவில் கடந்த ஆண்டு நடந்த சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி வந்தனர். அந்த தேசியக் கொடிகளில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com