search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான்- லாலு மகள் உருக்கம்
    X

    லாலு பிரசாத் யாதவ் - ரோகிணி ஆச்சார்யா

    அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான்- லாலு மகள் உருக்கம்

    • தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்.
    • என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன்.

    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 74), கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் உள்ள இவர் தற்போது உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார்.

    டெல்லியில் மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கியுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் மறு வாழ்வு தரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தனக்கு உயிர் தந்த தந்தைக்கு மற்றொரு மகளான ரோகிணி ஆச்சார்யா சிறுநீரகம் தந்து மறு வாழ்வு தர மனமுவந்து முன்வந்துள்ளார்.

    இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைகள் முடித்து வந்தார்.

    அவருக்கு தனது இரு சிறுநீரகங்களில் ஒன்றை வழங்க முன்வந்துள்ள மகள் ரோகிணி ஆச்சார்யா, ஒரு டாக்டர் ஆவார். இவரது கணவர் சாம்ஷெர் சிங், சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் தற்போது சிங்கப்பூரில்தான் வசித்து வருகின்றனர்.

    தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்தான் என்று ரோகிணி ஆச்சார்யா உருகுகிறார்.

    தந்தைக்கு சிறுநீரகம் அளிப்பது குறித்து ரோகிணி ஆச்சார்யா உருக்கமுடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன். எல்லாம் நல்ல விதமாக நடந்தேற வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் குரல் கொடுக்க அப்பா தகுதியானவராக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அரசியல் களத்தில் இருந்து வெளியே உள்ள இவர், தனது தந்தை லாலுவின் மடியில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட 2 புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். (அதில் ஒன்றை இங்கே காணலாம்.)

    இவர் அவ்வப்போது லாலு பிரசாத்தின் ஆதரவாளர்களை, தனது தந்தையின் ரசிகர்களாக கருதி அவர்களுடன் டுவிட்டர் வழியாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×