

ஐதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில் சுமார் 2,800 டீசல் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் 'பசுமை வரி' விதிக்கப்படுவதாக தெலங்கானா போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, டவுன் பஸ்களின் பயணக் கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.
இந்த பஸ் டிக்கெட் கட்டண உயர்வை கண்டித்து, சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணி நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்தது.
பாரதிய ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமா ராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் உள்ளிட்டோர் ரெதிஃபைல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலைப் போக்குவரத்துக் கழகம் வரை பஸ்சில் பயணிக்கும் வகையில் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். கச்சிபவுலியில் உள்ள இல்லத்தில் கே.டி. ராமா ராவ், கோகபேட்டில் உள்ள இல்லத்தில் ஹரீஷ் ராவையும் காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் பி. சபிதா இந்திரா ரெட்டி, குத்புல்லாபூர் எம்எல்ஏ விவேகானந்த கவுட், எம்எல்சி ஷம்பிர்பூர் ராஜு உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.