ஒரே வார்த்தையால் வேலையிழந்த ஆசிரியர்.. டுவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு..!

"படித்தவர்களுக்கு வாக்களியுங்கள்" என வகுப்பில் உள்ளவர்களுக்கு பதில் அளித்தார்வகுப்புகளின் நோக்கம் திசை திரும்பலாம் என்கிறது யுனகாடமி
ஒரே வார்த்தையால் வேலையிழந்த ஆசிரியர்.. டுவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு..!
Published on

இந்தியாவில் பெங்களூரூவை மையமாக கொண்ட தனியார் இணையவழி கல்வி நிறுவனம் யுனகாடமி (Unacademy).

இந்தியாவில் உள்ள பல அரசு வேலைகளுக்கான தேர்வுகளுக்கும், தனியார் நிறுவனங்களின் தேர்வுகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கும் நாடு முழுவதும் ஏராளமானோர் இணைய வழியில் கற்று வருகின்றனர்.

யுனகாடமி நிறுவனம் அவர்களுக்கு வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களை நியமிக்கும். அந்த ஆசிரியர்கள் இந்நிறுவனத்தின் பாடத்திட்டங்களின்படி வகுப்புகளை இணைய வழியிலேயே எடுப்பார்கள். இந்த வழிமுறை கொரோனா காலகட்டத்திலிருந்து இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

இந்நிறுவனத்தின் ஆசிரியர்களில் ஒருவர் கரன் சங்க்வான். இவர் கிரிமினல் சட்டத்துறையில் பட்டப்படிப்பு பெற்றவர். கரன் சங்க்வானிடம், அவரது வகுப்பு ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகியவற்றில் கொண்டு வர இருக்கும் மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்டது.

இது குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இணையவழியில் உரையாடும் போது, "படித்தவர்களுக்கு வாக்களியுங்கள்" என வகுப்பில் உள்ளவர்களுக்கு கரன் பதில் தெரிவித்தார். வகுப்புகளில் தங்கள் சொந்த கருத்துக்களை ஆசிரியர்கள் தெரிவிப்பதனால் வகுப்புகள் எடுக்கப்படுவதன் நோக்கம் திசை திரும்பலாம் என குற்றம் சாட்டி அவரை யுனகாடமி நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது பலவித கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். புது டெல்லி முதல்வரான அர்விந்த் கெஜ்ரிவால் கரனின் பதவி நீக்கத்திற்கு ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் (டுவிட்டர்) வலைதளத்தில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது, "படித்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்பது ஒரு குற்றமா? படிக்காதவர்களை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் படிக்காதவர்களாக இருப்பது கூடாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான இந்த காலகட்டத்தில் படிக்காதவர்கள் மக்கள் பிரதிநிதிகளானால் நவீன இந்தியாவை கட்டமைக்க முடியாது," என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com