என் மலர்
இந்தியா
கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே கோரிக்கைகள்- மக்களவையில் வலியுறுத்திய விஜய் வசந்த் எம்.பி.
- புதிய ரெயில்கள் வழங்குவதில் மற்றும் ரெயில்வே கட்டமைப்பு பணிகளில் தமிழகம் ஓரம் கட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்
- ஐதராபாத் சென்னை ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பதன் மூலம் கூடுதலாக ஒரு ரெயில் என்ற கோரிக்கை நிறைவேறும்
புதுடெல்லி:
கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே கோரிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மக்களவையில் பேசியதாவது:
மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே,
இந்த அரசாங்கம் தென்னிந்தியாவில் அமைந்துள்ள தமிழகத்தையும் குறிப்பாக எனது தொகுதியான கன்னியாகுமரியையும் ரெயில்வே திட்ட வளர்ச்சி பணிகளில் எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த அரசாங்கம் பதவியேற்ற பின்னர் புதிய ரெயில்கள் வழங்குவதில் மற்றும் ரெயில்வே கட்டமைப்பு பணிகளில் தமிழகம் ஓரம் கட்டப்படுகிறது. இந்தியா முழுவதும் புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரெயில்கள் மக்களின் தேவைக்கேற்ப நீட்டிக்கப்படுகிறது. ஆனால் தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு ரெயில்வே அமைச்சகம் செவி சாய்க்கவில்லை.
இந்தியாவின் அனைத்து ரெயில்வே மண்டலங்களும் பயணிகளின் தேவைக்கேற்ப ரெயில்களை நீட்டிக்கிறது. ஆனால் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ரெயில்வே மண்டலம் மட்டும் மக்களின் தேவைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்குப் பயணம் செய்வதற்கான ரெயில் சேவைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இந்த நகரங்களிலிருந்து தமிழகத்திற்கும் தமிழகத்திலிருந்து ஏனைய நகரங்களுக்கும் பயணம் செய்ய விருப்பப்படும் பயணிகள் இதன் காரணமாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஓராண்டுக் காலத்திற்கும் மேலாகப் புதுடில்லி, சென்னை, திருவனந்தபுரம் என அனைத்து ரெயில்வே அலுவலகத்திலும் நான் சென்று கோரிக்கைகளை வைத்து வருகிறேன். மாண்புமிகு ரெயில்வே துறை அமைச்சர் அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளையும் முன்வைத்தேன். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் விரைவு ரயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்திருந்தோம்.
குறிப்பாகத் தென் தமிழகத்தில் வாழும் மக்கள் ஐதராபாத் செல்வதற்கும் ஐதராபாத்திலிருந்து தென் தமிழகத்திற்கு வருவதற்கும் இந்த ரெயில் மிக உதவியாக இருக்கும். ஆனால் பல காரணங்களைச் சுட்டிக்காட்டி ரெயில்வே நிர்வாகம் இதனை மறுத்து வருகிறது. எங்கள் கோரிக்கையை இன்று நான் மீண்டும் முன் வைக்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த மக்களுக்குப் பயணம் செய்வதற்கு இரண்டே இரண்டு தினசரி ரெயில்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக மக்கள் மூன்று மடங்கு பயண கட்டணத்தைச் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
ஐதராபாத் சென்னை ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பதன் மூலம் கன்னியாகுமரி மக்களுக்குச் சென்னை செல்வதற்கும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருவதற்கும் கூடுதலாக ஒரு ரெயில் என்று கோரிக்கையும் நிறைவேற்றப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வேளாங்கண்ணிக்குச் சென்று பிரார்த்தனை செய்வதற்கு வசதியாக திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் ஒன்றைக் கேட்டிருந்தோம்.
சனிக்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு பின்னர் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வரை ஒரு ரெயில் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. இந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. போதுமான ரெயில்கள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, ஓடிக்கொண்டிருக்கும் ரெயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நிறுத்தங்களில் நிற்காமல் சென்று வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பாக இந்த ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று சென்றன. கொரோனா காலத்தின் போது சில ஊர்களில் இந்த ரெயில்கள் நிறுத்துவதைச் சுகாதார காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது கொரோனா நம்மை விட்டு விலகி விட்ட நிலையில் கொரோனா நோய்த் தொற்று காலத்திற்கு முன்பு நின்று சென்றது போல் இனியும் இந்த ரெயில்கள் முக்கியமான ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் ஏதுவுமின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். மக்களுக்குத் தேவையான வசதிகளை ரெயில் நிலையங்களில் செய்ய வேண்டியது மிக அத்தியாவசியமான ஒரு கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இரண்டாவதாக ஒரு ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதுவுமின்றி ரெயிலுக்காகக் காத்து நிற்கும் பயணிகள் மழைக்காலத்தில் ஒதுங்குவதற்கு மேற்கூரை கூட இல்லாத ஒரு நிலை இருந்து வருகின்றது.
அது போன்று நாகர்கோவிலின் முக்கிய சந்திப்பான கோட்டாறு ரெயில் நிலையத்தில் தேவையான அளவு கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். பல ஊர்களில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ரெயில்வே கேட் பல நேரங்களில் மூடப்படுவதால் அவசரத்திற்குப் பயணம் செய்வதற்கு மக்கள் தத்தளிக்கின்றனர்.
ஆகவே எங்கள் கோரிக்கைக்கு ஏற்ப முக்கிய இடங்களில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறேன். மந்தமாக நடைபெற்று வரும் ரெயில்வே இரட்டை வழிப்பாதையை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் மூலமாக, நான் இங்கு வைக்கும் எனது கோரிக்கைகளை ஏற்று உடனடி தீர்வு காண வேண்டும் என ரெயில்வே அமைச்சகத்துக்குக் கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.