என் மலர்
இந்தியா

பாகுபலி ராக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது...
- ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட'புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
விண்வெளி நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் ஏவுவதற்கு முன்பாக திருப்பதி திருமலை வெங்கடேசுவர சாமி கோவிலில் பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்தவகையில், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுடன் திருமலைக்கு நேற்று சென்று கோவில் சடங்குகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






