என் மலர்
இந்தியா

Iran War | ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டம் - விமானங்கள் ரத்து 13-ந்தேதி வரை நீட்டிப்பு
- பயணிகள் வசதிக்காக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
- இந்தியாவின் எந்த நகரத்திற்கும் கூடுதல் கட்டணம் இன்றி, மாற்று விமானங்களில் பயணிக்கலாம்.
இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் 28-ந் தேதி, போர் தொடங்கியதையடுத்து, மேற்கு ஆசியா, ஐக்கிய அரபு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்டு வரும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சர்வதேச விமானங்களும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்கள் ரத்து, வருகிற 13-ந் தேதி (வெள் ளிக்கிழமை) வரை நீடிக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.
அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளின் போர் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்ய, முன் பதிவு செய்திருந்த பயணிகள், எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், வேறு எந்த தேதிகளுக்கும் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம். அல்லது பயணத்தை ரத்து செய்து, முழு பணத்தையும் திரும்ப பெறலாம்.
பயணிகள் தங்களின் மாற்று முன்பதிவு, அல்லது பயணம் ரத்து கோரிக்கைகளை, ஏர் இந்தியா நிறுவனத்தின், இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவையில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா, எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, சிறப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த விமான நிலையத்தில் இருந்தும், இந்தியாவின் எந்த நகரத்திற்கும் கூடுதல் கட்டணம் இன்றி, மாற்று விமானங்களில் பயணிக்கலாம்.
துபாய்-ஜெய்ப்பூர் பயணிகள், துபாயில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஸ் அல் கைமா விமான நிலையம் சென்று, அங்கிருந்து, டெல்லிக்கு கூடுதல் கட்டணம் இன்றி, விமானத்தில் பயணிக்கலாம். அதே நேரத்தில் மேற்காசியா நாடுகளுக்கு கூடுதல் சிறப்பு விமானங்களை, இயக்குவதற்கான வாய்ப்புகளையும், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.






