என் மலர்
இந்தியா

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வங்கதேசத்திடம் இருந்து கோரிக்கை வந்ததை உறுதிப்படுத்திய இந்தியா
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
- ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேச அரசு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசிடம் இருந்து வாய்மொழி கோரிக்கை வந்துள்ளது. என்பதை உறுதிப்படுத்துகிறோம். தற்போது, இந்த விஷயத்தில் நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.






