என் மலர்
இந்தியா

இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் தொடங்கியது: ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விவாதிக்க வாய்ப்பு
- பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக இந்தியா கூட்டணி கருதுகிறது.
- என்டிஏ கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்வதாக தகவல்.
மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டிக்கான 272 இடங்கள் கிடைக்கவில்லை. அதவேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பிரதமர் மோடி கூட்டணி கட்சி ஆதரவுகளுடன் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
அதேநேரத்தில் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 38 இடங்கள் தேவை. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து சில கட்சிகளை இழுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என நினைக்கிறது. இதற்கான வியூகம் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஏழு மணியளவில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது சுயேட்சை, சிறுசிறு கட்சிகள், ஜெகன்மோகன் ரெட்டி கட்சி ஆகியவற்றை தங்கள் பக்கம் இழுப்பதுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரை ஒன்றாக தங்கள் பக்கம் இழுத்தால் அதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் தாங்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளோம் என சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்தால்தான் அந்த கூட்டணியின் எதிர்கால நோக்கம் குறித்து தெரியவரும்.






