என் மலர்
இந்தியா

திருப்பதி அலிபிரியில் 10 கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்
- ஸ்ரீவாரி மெட்டு பாதையில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது.
- பாலாஜி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள் வழியாக வரிசையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் செல்லும் பக்தர்களிடம் இலவச தரிசன டிக்கெட் பெற்று தருவதாக கூறி சிலர் ஏமாற்றி பணம் பறிக்கின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக ஸ்ரீவாரி மெட்டு பாதையில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. சீனிவாச மங்காபுரத்தில் நிரந்தர டிக்கெட் கவுண்டர் அமைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கான ஒப்புதல் கேட்டு மத்திய தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதி உள்ளனர். அனுமதி வர தாமதமாவதால் அதுவரை பாலாஜி பஸ் நிலையம் அருகே அலிபிரியில் 10 இலவச தரிசன டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதில் 4 கவுண்ட்டர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்காகவும், மீதமுள்ள 6 கவுண்டர்கள் நேர ஒதுக்கீட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை முதல் தரிசன டிக்கெட் பெற வரும் பக்தர்கள் பாலாஜி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள் வழியாக வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் தரிசன டிக்கெட் பெற்று செல்லும் பக்தர்கள் 1200-வது படிக்கட்டில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்கேனிங் மையத்தில் டிக்கெட்டுகளை கட்டாயம் ஸ்கேன் செய்ய வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






