search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மின்சாரம் திருட்டு: ரூ.68 ஆயிரம் அபராதம் செலுத்திய கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி
    X

    மின்சாரம் திருட்டு: ரூ.68 ஆயிரம் அபராதம் செலுத்திய கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி

    • ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    • என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்.

    பெங்களூரு:

    தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவருமான குமாரசாமியின் வீட்டிற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு மின்சாரம் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றச்சாட்டு கூறியிருந்தது.

    இதை ஒப்புக்கொண்ட குமாரசாமி, மின்விளக்கு அங்காரம் செய்த தொழிலாளி இதை செய்துவிட்டதாகவும், இது தனது கவனத்திற்கு வந்ததும், சட்டவிரோத மின்சாரம் எடுக்கப்பட்டதை அகற்றும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.

    இந்த மின்திருட்டு குறித்து பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) கொடுத்த புகாரின்பேரில் குமாரசாமி மீது ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை குமாரசாமி திருடிவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலக சுவர்களில் ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருட்டுத்தனமாக 71 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக குமாரசாமிக்கு ரூ.68 ஆயிரத்து 526 பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், நான் செய்யாத தவறுக்காக என்னை மின்சார திருடன் என்று சொல்கிறார்கள். நான் அபராதம் செலுத்தியுள்ளேன். இப்போதாவது என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். நான் காங்கிரஸ் தலைவர்களை போல் பெரிய திருடன் அல்ல என்றார்.

    Next Story
    ×