என் மலர்
இந்தியா

கேரளாவில் அமீபா நோய்: பக்தர்கள் பயப்பட வேண்டாம்- தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை
- சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
- மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர்," சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், கொரோனா தொற்று போல இந்த நோய் பரவாது, நீர் நிலையங்களில் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.






