என் மலர்
இந்தியா

புத்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்து மதங்களையும் நம்புகிறேன்- தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
- தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
- சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது.
இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் 14-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். விடுமுறை தினமான நவ.23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் ஓய்வு பெற உள்ளதால் இன்று அவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கடைசி நாள் விசாரணையை மேற்கொள்கிறார்.
டெல்லியில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பி.ஆர்.கவாய் கூறியதாவது:
புத்த மதத்தை பின்பற்றினாலும், இந்து மதம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் உட்பட அனைத்து மதத்தையும் நம்பும் உண்மையான மதச்சார்பற்ற நபர்.
தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன். அவர் உண்மையிலேயே மதச்சார்பற்றவராகவும், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிறந்த சீடராகவும் இருந்தார்.
நான் சுப்ரீம் கோர்ட்டில் என்னவாக இருக்கிறேனோ, அதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தால்தான் நான் இந்த நிலையை அடைந்தேன்.
தலைமை நீதிபதியாக தனது ஆறு மாத காலப் பணிக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஆறரை ஆண்டுகள் பணிக்கும் நிறுவனத்தின் கூட்டு வலிமையே காரணம். கடந்த ஆறரை ஆண்டுகளில் என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை செய்தேன்.
சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது. மாறாக அனைத்து நீதிபதிகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். முடிவுகள் என்னால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை, ஆனால் முழு நீதிமன்றத்திற்கும், விசாரணைகளுக்கும் முன்பாக வைக்கப்பட்டன.
சுப்ரீம் கோர்ட், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், ஊழியர்கள் போன்ற அனைவரின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






