என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    பீகாரில் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    • மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

    இந்த நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் பீகார் புறப்பட்டார்.

    இந்நிலையில், பீகார் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார்.

    மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    மேலும், இரு தலைவர்களின் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று காலை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×