search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளால் மக்கள் பணி செய்ய முடியாது: அமித்ஷா
    X

    குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளால் மக்கள் பணி செய்ய முடியாது: அமித்ஷா

    • காங்கிரசுக்கு வாக்களித்தால், கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக சித்தராமையா மாற்றி விடுவார்.
    • பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் முகாமிட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பல்லாரி மாவட்டம் சண்டூரில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி கிடைத்தால், தென்னிந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும். ராகுல்காந்தி கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பான அரசு செயல்பட்டு வருவதால், நாட்டை இணைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு நீங்கள் ஓட்டுப் போட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு சென்று விடும்.

    காங்கிரசுக்கு வாக்களித்தால், கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக சித்தராமையா மாற்றி விடுவார். குடும்ப அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், ஊழலிலும் மூழ்கி விட்டார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகளால் நாட்டின் வளர்ச்சி, மக்கள் பணிகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசால், பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல கூட முடியாமல் போனது.

    பா.ஜனதா ஆட்சியில் தான் துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும். பா.ஜனதாவுக்கு மாநில மக்கள் அபாரமான ஆதரவு அளித்து வருவது, இங்கு கூடி இருக்கும் மக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. கர்நாடகத்தில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சாத்தியமில்லை.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    Next Story
    ×