search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பவன் கல்யாணை சந்தித்தது ஏன்?: அம்பதி ராயுடு விளக்கம்
    X

    பவன் கல்யாணை சந்தித்தது ஏன்?: அம்பதி ராயுடு விளக்கம்

    • கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.
    • ஆளும் கட்சியில் இணைந்த ராயுடு, ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அமராவதி:

    கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது.

    குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு மறுக்கப்பட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆளும் கட்சியில் இருந்து விலகிய சில தினங்களுக்கு ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை அம்பதி ராயுடு திடீரென சந்தித்துள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், ஒய்.எஸ்.ஆர். கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற தனது கனவை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக யாரையும் குறைசொல்ல மாட்டேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும், என்னுடைய சிந்தாந்தமும் ஒத்துப் போகவில்லை.

    எந்த தொகுதியிலும் போட்டியிட விருப்பமில்லை. இதனால் அரசியலில் இருந்து விலக முடிவு செய்தேன். பவன் கல்யாண் கொள்கைகளைப் புரிந்துகொள்ள அவரது நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவரை சந்தித்தேன். பவன் கல்யாண் உடன் நிறைய நேரம் பேசினேன். அப்போது தனது வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றி என்னுடன் விவாதித்தார்.

    அவரது கொள்கையும், பார்வையும் என்னுடையது போலவே இருப்பதாக சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கிரிக்கெட் கடமைகளுக்காக துபாய்க்கு புறப்படுகிறேன். நான் எப்போதும் ஆந்திர மக்களுக்காக துணை நிற்பேன் என பதிவிட்டுள்ளார்.

    அம்பதி ராயுடு விரைவில் ஜனசேனா கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×