

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து ஐடி ஊழியர் ஒருவர் பரிதாபகமாக உயிரிழந்தார்.
இறந்தவர் பெங்களூருவின் பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டைச் சேர்ந்த மஞ்சு பிரகாஷ் ஆவார்.
டிசிஎஸ் ஊழியரான பிரகாஷ்,நேற்று, அருகிலுள்ள கரும்புக் கடைக்குச் சென்றுவிட்டு மதியம் 12.45 மணியளவில் வீடு திரும்பியதாகவும், பின்னர் தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரம் கழித்து, ஷூவின் அருகே பாம்பு இறந்து கிடப்பதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள், அறைக்குச் சென்று பிரகாஷை பார்த்தனர். பிரகாஷ் வாயில் நுரை தள்ளியதாகவும், காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பின்னர் பிரகாஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் பிரகாஷின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் பின் பிரகாஷின் ஒரு காலில் எந்த உணர்வும் இல்லை. அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.