இமாச்சல பிரதேசத்தில் கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிரடி

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர், பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட 15 எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிரடி
Published on

இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.

ஆனால், ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்.எல்.ஏ.-க்களை (25) கொண்ட பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று சட்டமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.-க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் பட்ஜெட் மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பா.ஜனதாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிதி மசோதாவை கொண்டு வர இருப்பதால், அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களும் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டிருந்தார். 

இந்த கொறடா உத்தரவை மீறியதாக ரஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தேர் தத் லகான்பால், தேவிந்தர் குமார் பூட்டோ, ரவி தாகூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய ஆறு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. அவர்கள் மீதான உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com