search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜய் சிங்லா
    X
    அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜய் சிங்லா

    ஊழல் குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சர் கைது- பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை

    ஒரு ரூபாய் ஊழலைக் கூட நான் சகித்துக் கொள்ள மட்டேன். பஞ்சாபை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. காங்கிரசை பின்னுக்கு தள்ளி அபார வெற்றியைப் பெற்றது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஆம் ஆத்மி ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டு நிகழ்ந்துள்ளது.

    பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டதாக அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    விஜய் சுங்லா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெண்டர்கள் மற்றும் கொள்முதலில் ஒரு சதவீத கமிஷன் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பஞ்சாப் அரசு விஜய் சிங்லா மீது நடவடிக்கை எடுத்தது. தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் விஜய் சிங்லா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது:-

    எனது அரசின் கீழ் ஒரு அமைச்சர் தனது துறையின் ஒவ்வொரு டெண்டர் மற்றும் கொள்முதல் செய்வதிலும் ஒரு சதவீதம் கமிஷன் கோரியதாக குற்றச்சாட்டு என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரத்தை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டேன். இது எனக்கு மட்டுமே தெரியும். இது ஊடங்களுக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ தெரியாது.

    சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா மீது கடும் நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளேன்.

    ஆம் ஆத்மி அரசு ஊழலை பொறுத்துக் கொள்ளாது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015ம் ஆண்டு தனது உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.

    ஒரு ரூபாய் ஊழலைக் கூட நான் சகித்துக் கொள்ள மட்டேன். பஞ்சாபை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன்.

    ஆம் ஆத்மி அமைச்சர்களில் ஒருவர் இரண்டே மாதங்களில் ஊழலில் ஈடுபட்டதாக சில கட்சிகள் இப்போது சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இதற்கு நான்தான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்வில் இழுபறி- முடிவு எடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க. தலைவர்கள்
    Next Story
    ×