search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுபைர்
    X
    சுபைர்

    பாலக்காடு அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர் கொலை- போலீசார் விசாரணை

    பாலக்காடு அருகே தந்தை கண்முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்பள்ளி பாறையை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன் சுபைர் (வயது 43).

    சுபைர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டர் ஆவார். நேற்று இவரும், இவரது தந்தையும் ஒரு மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் அபுபக்கரும், அவரது மகன் சுபைரும் தூக்கி வீசப்பட்டனர்.

    அப்போது சில மர்ம நபர்கள் காரில் இருந்து இறங்கினர். அவர்கள் சுபைரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சுபைர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை கண்டு அவரது தந்தை அலறினார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் சுபைரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுபைரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் கொலையாளிகள் வந்த கார் அடையாளம் தெரிந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    பாலக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரையும் இதே போல காரில் வந்த கும்பல் வெட்டி கொன்றனர்.

    அந்த சம்பவத்திற்கு பழிக்கு பழியாக சுபைர் கொல்லப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×