search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முககவசம் அணிதல் தொடர வேண்டும்
    X
    முககவசம் அணிதல் தொடர வேண்டும்

    கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன: முககவசம் அணிதல் தொடர வேண்டும்

    கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டாலும் பொது சுகாதாரம் தொடர்பான இந்த வழிகாட்டுதல்கள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி :

    சீனாவில் தோன்றி உலகையே உலுக்கி வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இந்த தொற்று பரவத்தொடங்கியதும் மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதியன்று பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள், பொது போக்குவரத்து நிறுத்தம், பள்ளி, கல்லூரிகள் அடைப்பு, வணிக வளாகங்கள் மூடல், தியேட்டர்கள் மூடல் இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முககவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் நீண்டன. திருமணம் போன்ற சுபகாரியங்களில் பங்கேற்கவும், இறுதிச்சடங்கு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் எண்ணிக்கை கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

    2 ஆண்டுகளாக இத்தகைய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தன.

    இவற்றுக்கு மத்தியில் 3 கொரோனா அலைகளை நாடு சந்தித்தது.

    கொரோனா பரவல் நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும், மீண்டும் பரவல் உச்சம் தொடுகிறபோது, மறுபடியும் கட்டுப்பாடுகள் போடப்படுவதும் தொடர்ந்தது.

    தற்போது இயற்கையாகவே 80-90 சதவீத மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதும், இதே அளவிலான மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு நோய் எதிர்ப்புச்சக்தி பெருகியும் இருப்பது செரோ ஆய்வில் தெரிய வந்தது.

    கொரோனா 3-வது அலை முற்றிலும் கட்டுக்குள் வந்துவிட்டது. 4-வது அலை என்று ஒன்று வந்தால்கூட பெரிதான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அறிவித்து அமலில் இருந்து வந்த அனைத்து கட்டுப்பாடுகளும் மார்ச் 31-ந் தேதியுடன் நீக்கப்பட்டு விடும், புதிதாக எந்த உத்தரவையும் வெளியிடப்போவதில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 23-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி கொரோனா கால கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்து விட்டன.

    அதே நேரத்தில் பொது இடங்களில் முககவசம் அணிவது தொடர வேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்ற இரு கட்டுப்பாடுகளையும் அனைவரும் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டாலும் பொது சுகாதாரம் தொடர்பான இந்த வழிகாட்டுதல்கள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×