என் மலர்
இந்தியா

பலியானவரின் உடல் சாலையில் சிதறி கிடப்பதையும், காமிராவில் குண்டு வீசியவர்கள் தப்பி சென்ற காட்சி
பாடல் ஒலிப்பரப்புவதில் ஏற்பட்ட மோதல்: திருமண வீட்டில் குண்டு வீசி வாலிபரை கொன்ற கும்பல்
கேரளாவில் குண்டு வீசி பலியான ஜிஸ்ணுவின் உடலுடன் திருமண வீட்டில் இருந்தவர்கள் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தோட்டடா பகுதியில் உள்ள ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்தது.
திருமண வீட்டில் ஒலி பெருக்கி கட்டி பாடல்கள் ஒலிப்பரப்பபட்டது. அப்போது அங்கு வந்த சிலர், பாடல்களை சத்தமாக வைக்க கூடாது என்று கூறினர்.
இதனால் திருமண வீட்டில் இருந்தவர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை மூண்டது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி மோதல் மூண்டது.
அப்போது அங்கு ஒரு கும்பல் வேனில் வந்தனர். அதில் இருந்து இறங்கியவர்கள் திடீரென திருமண வீட்டில் வெடி குண்டுகளை வீசினர்.
2 குண்டுகள் வீசப்பட்டதில் ஒரு குண்டு வெடிக்கவில்லை. அடுத்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் திருமண வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் திருமண வீட்டிற்கு வந்த வாலிபர் ஜிஸ்ணு என்பவர் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார்.
இதனை கண்டதும் குண்டு வீசிய கும்பல் மீண்டும் வேனில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து திருமண வீட்டில் இருந்தவர்கள், பலியான ஜிஸ்ணுவின் உடலுடன் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து கண்ணூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே திருமண வீட்டில் குண்டு வீசிய கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story






