search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை 20 அடி நீள ராட்சத சுறாமீன்.
    X
    மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை 20 அடி நீள ராட்சத சுறாமீன்.

    கேரளாவில் மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை சுறாமீன்

    கேரளாவில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாமீன் சுமார் 20 அடி நீளம், 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது அரிய வகை பீமன் சுறாமீன் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோவளம் சுற்றுப்புறங்களில் மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு மற்றும் கட்டு மரங்களில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஆழமான கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மீன்களுக்கு விரித்த வலையில் வித்தியாசமாக ஏதோ ஒன்று பிடிப்பட்டிருப்பதை கண்டனர்.

    அவர்கள் வலையை இழுத்து பார்த்தபோது அதில் ராட்சத சுறாமீன் ஒன்று சிக்கியது தெரிய வந்தது. இதையடுத்து மீன் வலையை அறுத்து ராட்சத சுறாமீனை கடலில் விட முயன்றனர்.

    ஆனால் ராட்சத சுறா மீன் வலையில் இருந்து செல்ல முடியாமல் வலைக்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து நேற்று காலை கோவளம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் அந்த ராட்சத சுறாமீன் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் மீனவர்கள் உதவியுடன் 2 மணி நேரம் போராடி அந்த சுறா மீனை வலையில் இருந்து மீட்டனர். அந்த சுறாமீன் சுமார் 20 அடி நீளம், 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது அரிய வகை பீமன் சுறாமீன் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட ராட்சத சுறாமீனை மற்றொரு படகில் கொண்டு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் அதனை ஆழமான கடல் பகுதியில் விட்டனர். கடலில் விடப்பட்ட சுறாமீன் மீண்டும் தண்ணீருக்கு மேல் எழும்பி 2 நிமிடம் மீனவர்களை பார்த்து விட்டு கடலுக்குள் திரும்பி சென்றது. இதுபற்றி கூறிய மீனவர்கள், இந்த அரியவகை மீன் மீண்டும் கடலுக்குள் விட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திரும்பி பார்த்ததாக கூறினர். 

    Next Story
    ×