search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமந்தா
    X
    அனுமந்தா

    குடும்பம் நடத்த பணம் இல்லாததால் சிறுநீரகத்தை விற்ற அரசு போக்குவரத்து ஊழியர்

    குடும்பம் நடத்த பணம் இல்லாததால், கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் கொப்பலில் அரங்கேறி உள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பஸ் போக்குவரத்து சேவைக்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது. இதன்காரணமாக டிரைவர்கள், கண்டக்டர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போக்குவரத்து துறை திணறியது. பின்னர் போக்குவரத்து ஊழியர்களுக்கு பாக்கி வைத்து சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பஸ்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தன. ஆனாலும் தங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை போக்குவரத்து துறை வழங்கவில்லை என்றும், குறைந்த அளவில் சம்பளம் தருவதாகவும் ஊழியர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மேலும் வேலை நிறுத்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதனால் போக்குவரத்து துறையை நிர்வகித்து வரும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தார். இந்த நிலையில் குடும்ப செலவுக்காக கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா கரகெரே. இவர் தற்போது மனைவி, 3 குழந்தைகள், தனது தாயுடன் கொப்பல் மாவட்டம் குஷ்டகி டவுனில் வசித்து வருகிறார். மேலும் கங்காவதியில் உள்ள கர்நாடக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அனுமந்தா ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத சம்பளமாக ரூ.16 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாமல் இருந்த போது அனுமந்தாவுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர் குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்து உள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி அவர் குடும்பத்தை நடத்தி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அனுமந்தாவுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.3,500 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதி அடைந்த அனுமந்தா வேறு வழியின்றி தனது சிறுநீரகத்தை விற்று அதன் மூலம் பணம் பெற்று உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அனுமந்தா தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து கழக ஊழியரான எனக்கு கடந்த 2 மாதங்களாக முழுமையான சம்பளம் வழங்கப்படவில்லை. எனது வீட்டில் வயதான தாய் உள்ளார். அவருக்கு மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. 3 குழந்தைகளை வளர்க்க வேண்டி உள்ளது. ரேசன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் எனது குடும்பத்தை காப்பாற்ற எனது சிறுநீரகத்தை விற்று விட்டேன்.

    இவ்வாறு அந்த பதிவில் எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை பார்த்த ஏராளமானோர் அனுமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். குடும்ப செலவுக்காக சிறுநீரகத்தை போக்குவரத்து கழக ஊழியர் விற்பனை செய்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×