search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்- காதல் மனைவி மீது ‘ஆசிட்’ வீசிய கணவர் கைது

    சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம் அடைந்து காதல் மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    பெரும்பாவூர்:

    கண்ணூர் மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த பிரிஜேஷ்(வயது 38). இவர், பத்தனம்திட்டா மாவட்டம் ராணி அருகே உள்ள வெண்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த பிரிஜா(34) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பிரிஜா தனது 2 மகன்களுடன் மடத்தும்குழி என்ற இடத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அங்கு பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    அதன்பின்னர் பிரிஜாவை பலமுறை பிரிஜேஷ் சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரிஜா வழக்கம்போல் தனது தாயார் வீட்டில் இருந்து பஜாரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்காக நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற பிரிஜேஷ் அவரை வழிமறித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மீண்டும் அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரிஜேஷ், பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த ஆசிட்டை பிரிஜா மீது வீசினார். இதில் அவரது முகம், தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியால் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தனது காதல் மனைவி மீது ஆசிட் வீசிய பிரிஜேஷை, அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் ஆசிட் வீச்சில் அவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர், பெருநாடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×