search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிகாரிகள் டார்ச்சரால் அரசு வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் டாக்டர்

    பெங்களூரு அருகே அதிகாரிகளின் டார்ச்சரால் டாக்டர் ஒருவர் அரசு வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம் ஆகும்.

    கொரோனா பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் ரவீந்திரநாத்தை, ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தினர்.

    இதன் காரணமாக மனம் உடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்தார். ஆனால் மறுநாளே அவருக்கு 2-வது முறையாக கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த டாக்டர் ரவீந்திரநாத் தனது வேலையை ராஜினாமா செய்தார். சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் டார்ச்சரால் தான் வேலையை விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    வேலையை விட்டு நின்ற டாக்டர் ரவீந்திரநாத், தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்தார். அங்கு தற்போது ரவீந்திரநாத் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அந்த ஆட்டோவின் முன்பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லை கொடுத்ததாக வாசகத்தை எழுதியுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, ஆட்டோ ஓட்டி வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்சினைகளை தெரிவியுங்கள் என்றார். மேலும் டாக்டர் ரவீந்திரநாத்தை மீண்டும் பணிக்கு திரும்பும் படி கேட்டுக்கொண்டார். அதன்படி விரைவில் டாக்டர் ரவீந்திரநாத், மந்திர ஸ்ரீராமுலுவை சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றி புகார் கொடுக்க உள்ளார்.

    Next Story
    ×