search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் - மஞ்சுநாத் பிரசாத் தகவல்
    X

    பெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் - மஞ்சுநாத் பிரசாத் தகவல்

    18-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறினார். #LokSabhaElections2019
    பெங்களூரு:

    பெங்களூரு மாநகராட்சி கமிஷனரும், பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூரு நகரில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய என 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு வடக்கு தொகுதியில் 31 பேரும், பெங்களூரு மத்திய தொகுதியில் 22 பேரும், பெங்களூரு தெற்கு தொகுதியில் 25 பேரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

    பெங்களூருவில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 72 லட்சத்து 64 ஆயிரத்து 796 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் ஆணைய வழிக்காட்டுதலின்படி படம் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்குள் இந்த பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும். மேலும் வாக்குச்சாவடியை கண்டுபிடிப்பது, வாக்களிப்பது எப்படி?, புகார்கள் தெரிவிப்பது எப்படி? என்பன போன்ற அம்சங்கள் அடங்கிய வழிக்காட்டு புத்தகம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் அடையாள அட்டையை பிறரிடம் கொடுப்பது குற்றமாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 3 தொகுதிகளையும் சேர்த்து பல்வேறு செயல்களுக்காக அனுமதி கேட்டு ‘சுவிதா’ செயலி மற்றும் நேரில் வந்தவர்களிடம் இருந்து 1,298 விண்ணப்பங்கள் வந்தன. இதில், 1,202 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 49 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, 47 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ‘சி-விஜில்’ செயலி வழியாக மொத்தம் 101 புகார்கள் வந்தன. இதில் 29 புகார்கள் நிராகரிக்கப்பட்டன. 69 புகார்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் பணம்-பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், செலவு கணக்கீடு குழு உள்பட மொத்தம் 551 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு நகரில் உள்ள 3 தொகுதிகளிலும் இதுவரை ரூ.3.20 கோடி ரொக்கம், ரூ.5.75 கோடி மதுபானம், 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறக்கும் படை, போலீசார் உள்பட பல்வேறு குழுவினர் சார்பில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கலால் சட்டத்தின் கீழ் மொத்தம் 2,573 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது உதவி தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 11-ந் தேதி நடந்த பயிற்சியில் 42 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடியில் ஊழியர்களை நியமிக்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 28 உதவி தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்திலும் தபால் ஓட்டுகள் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 5,499 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு நகரில் மொத்தம் 8,514 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்காக 6,869 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 982 கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் உள்பட 1,437 வாகனங்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் அதிகாரியாகவும், ஊழியர்களாகவும் பணி செய்ய உள்ளனர்.

    பெங்களூரு நகரில் மொத்தம் 477 வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 1,234 பேர் நுண்பார்வையாளர்களாக செயல்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ‘வீல்சேர்’, பூதக்கண்ணாடி வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளை அழைத்து வருவதற்காக வாடகை கார் வசதிகள் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களை கேட்டு பெறவும், புகார்களை அளிக்கவும் பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் தொடர்பு மையம தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரம் செயல்படும் இந்த மையத்தை 1950 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுவரை 34 ஆயிரத்து 5 அழைப்புகள் வந்துள்ளது.

    15-ந் தேதிக்குள் (நாளை) வேட்பாளர்கள் தேர்தல் செலவு விவரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள், கட்சிகள் உணவு வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 16-ந் தேதியில் இருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. ஓட்டல்களில் தங்கும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.



    16-ந் தேதி மாலை 6 மணியுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது. வாக்குப்பதிவு தினத்தில் வாக்குச்சாவடியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் பிரசாரம் செய்யவும், செல்போன் பயன்படுத்தவும், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களை தவிர்த்து பிற ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிறகு மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசாரின் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

    பெங்களூரு வடக்கு தொகுதியில் பதிவாகும் வாக்குகள் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப்பள்ளி(பெங்களூரு வடக்கு), பேலஸ் ரோட்டில் உள்ள மவுண்ட் கார்மல் பெண்கள் பி.யூ. கல்லூரி (பெங்களூரு மத்திய தொகுதி), ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ. கல்லூரி (பெங்களூரு தெற்கு) ஆகியவற்றில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையானது மே மாதம் 23-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    Next Story
    ×