search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை
    X

    புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaAttack #PulwamaEncounter
    புல்வாமா:

    காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம் போர்க்களம் போல் மாறி உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வந்தது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவற்றை முறியடித்த நிலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்தின் மூலம் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் கோழைத்தனமாக செய்து உள்ளனர்.

    ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிறகு மீண்டும் கைவரிசை காட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கண்டறிந்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தை ‘சீல்’ வைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை கடந்த 2 நாட்களாக நடத்தி வருகிறார்கள்.

    நேற்று பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மேலும் அதிகரிக்கப்பட்டது. அப்போது புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் எனும் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் சி.ஆர்.பி. எப். வீரர்கள், உள்ளூர் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.

    நேற்று இரவு அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது.

    வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. எனவே கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கும், இந்த பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    ஆகையால் அவர்களை உயிரோடு பிடிக்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது திடீரென பயங்கரவாதிகள் அந்த வீட்டுக்குள் இருந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.



    பயங்கரவாதிகள் வீட்டின் நான்கு புறமும் இருந்து சுட்டதால் பாதுகாப்பு படையினர் சற்று பின்வாங்கி பிறகு தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அந்த வீட்டுக்குள் அதிரடியாக ஊடுருவவும் பாதுகாப்பு படையினர் முயன்றனர். அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    அவர்களில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார். அவரது பெயர் டான்டியல். மற்ற வீரர்கள் சேவ்ராம், அஜய்குமார், ஹரிசிங் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த தாக்குதலில் மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குல்சார்முகமது என்ற வீரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    இதனால் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. துப்பாக்கி சண்டையில் வீட்டின் உரிமையாளர்கள் 2 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். அப்போது அந்த வீட்டுக்குள் 8 பயங்கரவாதிகள் இருப்பது உறுதியானது.

    அந்த 8 பயங்கரவாதிகளும் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த வீட்டை சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    10.30 மணி அளவில் பாதுகாப்பு படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். இதனால் பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷீத் காஜி எனவும், மற்றொருவன் ஹிலால் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 6 பேர் அந்த வீட்டுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    புல்வாமா மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaAttack #PulwamaEncounter
    Next Story
    ×