search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் - பீகாரில் போலீஸ்காரர் மரணம்
    X

    வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் - பீகாரில் போலீஸ்காரர் மரணம்

    வடமாநிலங்களில் மக்களை குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பீகாரில் குளிரால் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். #Biharpolicedeath
    ஆமதாபாத்:

    வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. மேலும் கடுமையான பனி மூட்டமும் நிலவுகிறது.

    குஜராத் தலைநகர் காந்திநகரில் 6.8 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானதால் மக்கள் குளிரில் நடுங்கினர். இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் மற்றும் பவன் நகரில் இதே நிலை நீடித்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 2 அல்லது 3 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இமாசலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. நேற்றுமுன்தினம் இரவு பனிப்பொழிவு 5 செ.மீ. அளவுக்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு அங்கு மணாலி மற்றும் கல்பா நகரங்களில் மைனஸ் 9.3 டிகிரி மற்றும் மைனஸ் 8 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவானது. சிம்லாவில் மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்ப நிலை இருந்தது.

    அதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் உள்ளிட்ட நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதோடு, அங்கு 1.0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அங்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பீகாரில் வாட்டி வதைக்கும் குளிருக்கு போலீஸ்காரர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாலந்தா மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ஷா என்ற போலீஸ்காரர் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் இருந்தபோது குளிரால் சரிந்து விழுந்தார். சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக இறந்தார். #Biharpolicedeath
    Next Story
    ×