search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்து- தமிழகத்தில் 3 இடம் தேர்வு
    X

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்து- தமிழகத்தில் 3 இடம் தேர்வு

    தமிழகத்தில் மூன்று இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. #HydrocarbonProject #Vedanta
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்தது. இதன்படி தமிழகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு, ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது. 

    இந்த டெண்டரில் வேதாந்தா நிறுவனத்துக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் கிடைத்துள்ளன. 

    தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதற்கிடையே நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில், காவரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமேஸ்வரம் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #HydrocarbonProject #Vedanta
    Next Story
    ×