என் மலர்
செய்திகள்

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
ஐதராபாத்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் தெலுங்கானாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி மாணவ- மாணவிகளை நேரில் சந்தித்து உரையாட திட்டமிட்டு உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய மாணவ பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளார். இதற்கான அனுமதியை மாணவர்கள் தரப்பில் நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது.
ஆனால் உஸ்மானியா பல்கலைக்கழகம் ராகுல் காந்தி மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி மறுத்து விட்டது. பாதுகாப்பு காரணமாக இந்த அனுமதியை பல்கலைக் கழகம் மறுத்து உள்ளது.
இதுகுறித்து உஸ்மானியா பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமசந்திரன் கூறியதாவது:-
இந்த பல்கலைக் கழகத்தில் பல்வேறு மாணவர் அமைப்பினர் உள்ளனர். ஒரு அமைப்பினர் ராகுல் காந்தியை சந்திக்க ஆர்வத்துடன் உள்ளார். ஆனால் மற்ற மாணவ அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவர்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியை நிலை நாட்டுவதுதான் எங்களது விருப்பம். ராகுல் காந்தி இசட் பாதுகாப்பில் உள்ளார். அவரை போன்ற தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பது கடினம். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுலை சந்திக்க அனுமதி மறுகப்பட்டதால் மாணவ பிரதிநிதிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஆளும் கட்சியின் நெருக்கடி காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மாணவர் அமைப்பினர் இன்று கோர்ட்டை நாடவும் முடிவு செய்து உள்ளனர்.






