search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.என்.எல். முறைகேடு இணைப்பு - தயாநிதி மாறன் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
    X

    பி.எஸ்.என்.எல். முறைகேடு இணைப்பு - தயாநிதி மாறன் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

    பி.எஸ்.என்.எல். இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரிய தயாநிதி மாறன் அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #DayanidhiMaran #SC
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  2004-06ம் ஆண்டு வரை  தொலைத்தொடர்பு துறை மந்திரியாக தயாநிதி மாறன்  பதவி வகித்தார்.

    அப்போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது இல்லத்துக்கு அருகே தனியாக தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் ஒன்று அமைத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணைப்புகளைப் பயன்படுத்தி, அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த மோசடி தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல்.  பொதுமேலாளர் பிரம்மநாதன், துணை மேலாளர் எம். வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன்நெட்வொர்க் துணைத் தலைவர் கண்ணன், தொழில்நுட்ப ஊழியர் ரவி ஆகியோர் மீது சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அதே ஆண்டு அக்டோபர் மாதம் 7 பேரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மீதான மனுவின் மீதான விசாரணை, வாதங்கள் முடிந்தன. இதில் மாறன் சகோதரர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

     பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை. ஆதலால், இந்த வழக்கில் இருந்து 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 25-ம்  வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லாது என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



    இந்த உத்தரவை எதிர்த்தும் இவ்வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு மாறன் சகோதரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளுமாறு மனுதாரர்களை அறிவுறுத்தியுள்ளது. #DayanidhiMaran #SC

    Next Story
    ×