search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம்
    X

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம்

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Yoga #InernationalYogaDay
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.



    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்கிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மும்பையில் யோகா செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதையொட்டி, அங்கு கமாண்டோக்கள் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லக்னோவிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலும் யோகா பயிற்சி செய்கிறார்கள். இதுபோல், ஒவ்வொரு மத்திய மந்திரியும் ஒவ்வொரு நகரங்களில் பங்கேற்கிறார்கள்.

    21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அதன் அடிவார முகாமில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ராணுவ வீரர்களிடையே பேசுகிறார்.

    தலைநகர் டெல்லியில் 8 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சி, ராஜபாதையில் நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள், துணை ராணுவ படையினர் உள்பட சுமார் 50 ஆயிரம்பேர் பங்கேற்கிறார்கள்.

    பதஞ்சலி யோகா சமிதி சார்பில் துவாரகாவிலும், வாழும் கலை மையம் சார்பில் ரோகிணி பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Yoga #InernationalYogaDay
    Next Story
    ×