search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கணவர் கைது
    X

    கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கணவர் கைது

    கேரள மாநிலம் கொல்லம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால மனைவியை விட்டத்தில் தொங்க விட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மாவேலிக்கரை நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (38). இவரது மனைவி அம்புலி (36).

    அனில் குமாருக்கும் வேறு ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அம்புலிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு உருவானது.

    சம்பவத்தன்று வீட்டு வாசலில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அம்புலி தனது கணவரிடம் இளம் பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறி உள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அனில் குமார் மனைவியை அடித்து உதைத்தார். இதில் அம்புலி மயக்கம் அடைந்தார்.

    இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து விட்டு வழக்கமாக நடக்கும் சண்டை தான் என அமைதியாக இருந்து விட்டனர். இந்த நிலையில் அனில் குமார் மயங்கி கிடந்த மனைவியை வீட்டிற்குள் தரதரவென்று இழுத்து சென்றார்.

    படுக்கை அறைக்கு இழுத்து சென்ற அவர் மனைவியின் கழுத்தில் கயிற்றால் கட்டி விட்டத்தில் தொங்க விட்டார். இதில் அம்புலி கழுத்து இறுகியது.

    அம்புலியை கணவர் இழுத்து செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என நினைத்து அங்கு வந்தனர். அவர்கள் அம்புலி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி அம்புலி இறந்தார். இது குறித்து நூரநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. செங்கனூர் டி.எஸ்.பி. பினு, மாவேலிக்கரை இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். மனைவியை கொன்ற அனில் குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×