என் மலர்
செய்திகள்

பிரதமர் மோடி வருகை எதிரொலி - காஷ்மீர் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நாளை நடைபெற இருந்த காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது. #NarendraModi #KashmirUniversityExams
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகைக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் பல்வேறு பிரிவினைவாத இயக்க தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக மக்களை திரட்டி லால் சவுக் சதுக்கத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலை. நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை நடக்கவுள்ள பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்து வரும் செமஸ்டருக்கான தேர்வுகள் நாளைக்கு பதில் நாளை மறுதினம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. #NarendraModi #KashmirUniversityExams
Next Story






