என் மலர்
இந்தியா

தீயில் கருகிய பேருந்து
மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் 12 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்
- லாரி மீது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது
- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
நாசிக்:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர்.
இந்த விபத்து மற்றும் தீயில் சிக்கி 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்தனர். பஸ் தீப்பிடித்து எரிந்தது பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் பிரதமர் மோடி தனது வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொண்டார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.






